செய்திகள் (Tamil News)
நாராயணசாமி

புதுவையில் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் - நாராயணசாமி உத்தரவு

Published On 2019-10-29 10:30 GMT   |   Update On 2019-10-29 10:30 GMT
புதுவையில் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிறுவன் சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.

நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் சுஜித் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தை சுஜித் மரணம் நாட்டில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து உள்ளது. பயன்படாத அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் மூடவேண்டும்.

இதுபோல் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் இறங்க நல்ல தொழில்நுட்பத்தையும், பயிற்சியாளர்களையும் உருவாக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.



சுஜித் இழப்பு சோகத்தை ஏற்படுத்திய நாளாக உள்ளது. எனது சார்பிலும் புதுவை மக்களின் சார்பிலும் சுஜித் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவையிலும் மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் ஒரு சில இடங்களில் உள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளை அழைத்து அந்த ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளேன்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை அழைத்து பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News