செய்திகள் (Tamil News)
வேப்பிலைப்பட்டியில் மூடப்பட்டுள்ள கிணறு.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’- வேப்பிலைப்பட்டி கிராமத்தில் வாக்குறுதி நிறைவேற்றம்

Published On 2021-07-02 08:48 GMT   |   Update On 2021-07-02 08:53 GMT
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் ஒரு பாழடைந்த கிணறு இருந்து வந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அறிவித்தார். அதன்படி பொதுமக்கள் தங்களது பகுதியில் குறைகள் குறித்து புகார் மனுக்கள் அளித்தால் 100 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் ஒரு பாழடைந்த கிணறு இருந்து வந்தது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத இந்த கிணற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் கிணறு துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின்படி ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில் சுகாதாரமற்ற கிணறை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இந்த புகார் மனு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. பிறகு அதிகாரிகள் விரைந்து வந்து பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கிணற்றை சுற்றிலும் கம்பிகள் வைத்து மூடப்பட்டது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்படி, புகார் அளித்த 60 நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Similar News