தமிழ்நாடு

5 பேர் மரணத்துக்கு கள்ளச்சாராயம் காரணமா?- கலெக்டர் விளக்கம்

Published On 2024-06-19 09:00 GMT   |   Update On 2024-06-19 10:42 GMT
  • 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • கள்ளச்சாராயம் விஷ சாராயமாக மாறியதாலேயே அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். 

கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்ததாகவும், அதனை அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பலியான 5 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரே தெருவில் உள்ள தங்கள் வீடுகளில் 5 பேரின் சடலங்களையும் வைத்து இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே 5 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தனர் என்ற குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மறுத்துள்ளார். அவர்கள் வயிற்றுப் போக்கு, வலிப்பு நோய்களால் இறந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், வேறுசில உடல் பாதிப்பால் அவர்கள் உயிரிழந்ததாக கலெக்டர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


Tags:    

Similar News