தமிழ்நாடு

காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்- கட்டிவைத்து தாக்கியதாக 8 பேர் மீது வழக்கு

Published On 2023-06-12 06:12 GMT   |   Update On 2023-06-12 06:12 GMT
  • பள்ளி மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பை விடுதியில் தங்கி படித்து வருகின்றார்.

இந்நிலையில் கீழநீலித நல்லூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் அஜய் பிரசாத் (வயது 20) என்பவர் அந்த பள்ளி மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டின் அருகே சென்ற அஜய் பிரசாத், மாணவியிடம் நீ என்னை காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டியதாக மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியை மிரட்டியதை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவத்தன்று கீழநீலிதநல்லூர் பிள்ளையார் கோவில் அருகே அஜய்பிரசாத் சூப் குடிக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்றனர். அங்குள்ள மரத்தில் அவரை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய பனவடலிசத்திரம் போலீசார், அஜய் பிரசாத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News