வீட்டு வாசலில் தம்பதியை துரத்தி தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
- சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவார பகுதியான இந்திரா நகர், ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
ஐ.ஓ.பி.காலனி பகுதியில் அந்த யானை நடமாடி கொண்டிருந்தது. அப்போது சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.
அந்த பெண்ணின் கணவர் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்றார். அப்போது அங்கு சுற்றி திரிந்த யானை திடீரென அவரை தாக்க முயன்றது.
அவர் அங்கிருந்து ஓடி வீட்டிற்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் உள்ளே ஒடியதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருவரும் காட்டு யானையிடம் இருந்து தப்பியோடிய சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து பாரதியார் பல்லைக்கழக வளாகம் மற்றும் நீச்சல் குளம் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது.
இதையடுத்து இரவு முழுவதும் அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.