எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
- எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.
- எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னை:
சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.
மேலும் இங்கு பாதுகாப்பு உபகரணங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எழும்பூரில் அருங்காட்சியகத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி அருங்காட்சியகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் ரூ.62 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மீதமுள்ள பணிகளை ரூ.2.38 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளவும் அந்த கடிதத்தில் கூறி இருந்தார். அதன்படி மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் எழும்பூர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படுகிறது.
மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்தின் வாடகை மற்றும் இதர செலவினங்களை மாற்றியமைப்பதற்கான முன் மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அரசு பிறப்பித்து இருக்கிறது.
இந்த நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.