உள்ளூர் செய்திகள்
null

ஆம்ஸ்ட்ராங் கொலை.. சதித்திட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2024-07-24 10:45 GMT   |   Update On 2024-07-24 10:52 GMT
  • பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வக்கீல் அருளை, புழல் மற்றும் பெரம்பூர் பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். புழலில் சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படும் இடம், மற்றும் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு வேவு பார்த்த இடங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சதி திட்டம் தீட்டியது பற்றியும், பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் மலர்க்கொடி, ஹரிதரன், த.மா.கா.வை சேர்ந்த வக்கீல் ஹரிகரன், பா.ஜனதாவை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த மிண்ட் ரமேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளராக உள்ள மிண்ட் ரமேசிடம் 2 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் மிண்ட் ரமேஷ் தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற கோணத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. மிண்ட் ரமேசின் செல்போன் தொடர்புகள், அவரது வங்கி கணக்குகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மிண்ட் ரமேசுக்கு தொடர்பு இருப்பது போன்ற எந்த தகவல்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

இதே போன்று இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரது வங்கி கணக்குகள் முழுவதையும் போலீசார் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News