குடியிருப்புக்குள் 2 குட்டிகளுடன் உலா வரும் கரடி- பொதுமக்கள் அச்சம்
- உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
- கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது.
அரவேணு:
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
சற்று தொலைவிலேயே அக்கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் குட்டியுடன் கரடிகள் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். எனவே ஊருக்குள் குட்டியுடன் உலா வரும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.