தமிழ்நாடு

பெண் மருத்துவர் கொலை சம்பவம்- இந்தியா கூட்டணியின் பெண்ணியப் போராளிகள் மவுனம் காப்பது ஏன்? பாஜக கேள்வி

Published On 2024-08-14 10:09 GMT   |   Update On 2024-08-14 10:41 GMT
  • முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
  • கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கூட்டணியின் பெண்கள் மவுனம் காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தலைமறைவான இண்டி கூட்டணியின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி ஆகியோருக்கு,

உங்கள் இண்டிக் கூட்டணியின் ஒரு பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?

அப்பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மேற்குவங்கமே கொழுந்துவிட்டெறிய, திராவிடத்தின் பெண்ணியப் போராளிகளான திருமதி. கனிமொழி, செல்வி ஜோதி மற்றும் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய நீங்கள் இன்னும் அமைதி காப்பது ஏன்? அதுதான் உங்கள் இண்டி கூட்டணியின் ஒப்பந்தமா?

இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் முழுக்க காயங்களுடன், அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

இது தற்கொலை என்று கூறி, அவசரமாக இவ்வழக்கை முடிக்க முயற்சித்த கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக, உங்கள் எதிர்ப்பை எப்போதுதான் தெரிவிப்பீர்கள்? 

"செமினார் அரங்கிற்கு இரவில் தனியாக அவள் எதற்கு சென்றாள்?" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி சொல்லெறியும், மேற்குவங்க அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு எதிராக, பெண்ணியப் போராளிகளான நீங்கள் சிறு கண்டனங்கள் கூட தெரிவிக்காதது ஏன்?

"பெண்களுக்கான சமூக நீதி வேண்டும்" என்று நீங்களெல்லாம் நரம்பு புடைக்க பேசுவது வெறும் நாடாளுமன்றத்தில் மட்டும்தானா?

அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலம் என்பதால், உங்கள் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டீர்களா?

குற்றம் நடந்த இடத்தில் திடீர் கட்டுமானப் பணிகளைத் துவங்குதல், குற்றம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு அவசரமாக இடமாற்றம் செய்தல் முதலிய தடயங்களை அழித்து, இக்கொலையை மூடி மறைக்க நினைக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியின் முதல்வருக்கு எதிராக நீங்கள் எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்?

ஒருவேளை இக்கொலையில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்தவில்லையா ?

இன்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற நீங்கள் காக்கும் இந்த கனத்த மௌனமானது, நாளை பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News