தமிழ்நாடு (Tamil Nadu)

ராணிப்பேட்டை அருகே கார் தொழிற்சாலை: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Published On 2024-09-28 05:54 GMT   |   Update On 2024-09-28 05:54 GMT
  • ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 1231 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வகையான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா துறையூர், அகவலம், பெருவளையம் ,நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைகிறது.

புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது மக்களுக்கு பிடித்தமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.

இங்கு எலக்ட்ரிக் சொகுசு கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.இந்த வகையான கார்களுக்கு உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது இங்கு அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு விரைவாக தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் மட்டுமின்றி தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளதால் அனைத்து தரப்பினரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம். பி. எம். எல்.ஏ.க்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை யொட்டி வேலூர் சரக டிஐஜி தேவராணி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கிரண் சுருதி, மதிவாணன், ஸ்ரேயா குப்தா ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News