தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவது மேலும் தாமதமாகிறது

Published On 2022-07-05 04:10 GMT   |   Update On 2022-07-05 04:10 GMT

    சென்னை:

    நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    குறிப்பாக பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தேர்வு முடிவு வந்தால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. பிறகு ஜூலை 10-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிக்குள் வெளியிடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இறுதியில் ஜூலை 10-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. விடைத்தாள்கள் திருத்தம் பணியில் எதிர்பாராத விதமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு விட்டாலும் மறு ஆய்வு பணிகள் இன்னும் முடியவில்லை. அந்த பணிகள் முடிவதற்கு இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சில மாநிலங்களில் இருந்து விடைத்தாள்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சி.பி.எஸ்.இ. விடைத்தாள்களை பெறுவதில் தொடர்ந்து தாமதம் எழுந்தது.

    ஹெலிகாப்டர்கள் மூலம் விடைத்தாள்களை பெற்று ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம் என்று மத்திய அரசு கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    Tags:    

    Similar News