தமிழ்நாடு (Tamil Nadu)

கோப்புப்படம் 

அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4-ல் மீண்டும் ஆஜராக வேண்டும்.. நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-09-30 10:58 GMT   |   Update On 2024-09-30 10:58 GMT
  • உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
  • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.முக. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார். எனினும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது, பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தனர்.

செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்திலும் ஆஜர் ஆனார்.

அப்போது, அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சாட்சி விசாரணைக்காக இன்று ஆஜரான நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News