தமிழ்நாடு (Tamil Nadu)

வெயில் சுட்டெரிக்கிறது என கவலை வேண்டாம்... வருகிறது சென்னை புறநகர் வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்

Published On 2024-06-21 15:54 GMT   |   Update On 2024-06-21 15:54 GMT
  • சென்னை ஐசிஎஃப் 8 ரெயில்களை தயாரித்து வருகிறது.
  • இதில் இரண்டு சென்னை- செங்கல்பட்டு வழித்தடத்திற்காக சென்னை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களின் தலைநகரில் புறநகர் ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் புறநகரில் இருந்து வேலை பார்க்க வருபவர்கள் இந்த ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வேலைக்கு செல்லும் நேரம், வேலை முடிந்து புறப்படும் நேரத்தில் (PeaK Hours) முண்டியடித்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் புறநகர் ரெயிலில் பயணம் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. ரெயில்களை விட முன்வந்தது. மும்பையில் ஏற்கனவே புறநகர் ரெயில்களில் ஏ.சி. வசதி உள்ளது.

சென்னையில் சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டது. இதற்கான பிரத்யேக ரெயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. மொத்தம் 8 ரெயில்கள் தயாரித்து வருவதாகவும், அதில் இரண்டு சென்னை புறநகர் சேவைக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரெயில்வேத்துறை இரண்டு ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் பயணிப்போர் ஏ.சி. பெட்டியில் பயணிக்கலாம். இதனால் வியர்வையின்றி, சோர்வின்றி வேலைக்கு செல்லலாம். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லலாம். இதில் பயணிப்பதற்கான கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

Tags:    

Similar News