தமிழ்நாடு

நீலகிரியில் உடல் உறுப்பு தானம் செய்த பெண் உடலுக்கு கலெக்டர் நேரில் அஞ்சலி

Published On 2024-07-13 08:54 GMT   |   Update On 2024-07-13 08:54 GMT
  • உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.
  • சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியை சேர்ந்தவர் எமிலி (வயது63).

உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது உறவினர்கள் முன்வந்தனர். இது தொடர்பாக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த எமிலியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தனியாக பிரித்து எடுத்தனர்.

பின்னர் தானமாக பெறப்பட்ட கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.


கல்லீரல் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள் சங்கரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவரது உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் உறுப்பு தானம் இதுவாகும். மேலும் இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில், முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. மேலும் கலெக்டர் அருணா நேரில் சென்று உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் வினோத்குமார், மணிகண்டன், மயக்கவியல் மருத்துவர் கார்த்திக், ஊட்டி தாசில்தார் சரவண குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News