தமிழ்நாடு (Tamil Nadu)

அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2024-09-25 02:36 GMT   |   Update On 2024-09-25 02:36 GMT
  • காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா.
  • மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது.

சென்னை:

தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் 28-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ், தமிழர் - தமிழ்நாடு என தி.மு.க. முழக்கத்தை வைத்தபோது, அது குறுகிய கண்ணோட்டம் என்று கருதியவர்கள் உண்டு.

ஆனால் இன்று மொழி, இனம் - மாநில உரிமை என்று அந்த முழக்கம் விரிவான பொருளைத் தருவதுடன், தமிழைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும், தமிழரைப் போல இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனமும், தமிழ்நாட்டைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே பன்முகத்தன்மையும் மதநல்லிணக்கமும் கொண்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை அனைத்து மாநில மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

இதுதான் 75 ஆண்டுகால தி.மு.க.வின் இந்திய அளவிலான தாக்கம். இதனை எடுத்துச்சொல்ல ஒரு பவள விழா போதாது. அந்த அடிப்படையில் தி.மு.க.வுடன் கொள்கை கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால் வருகிற 28-ந்தேதி பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாட உள்ளோம்.

காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமை கட்சியினர் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற பவள விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நம் கழகத்துடன் தோழமை உறவு கொண்டுள்ள ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். உங்களில் ஒருவனான நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன்.

'மக்களிடம் செல்' என்று கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னதை கட்டளையாக ஏற்று திராவிட மாடல் அரசு மக்களுக்கான பணிகளை தொய்வின்றி தொடர்ந்து வருகிறது.

மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே கழகத்தின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்தி பெறவிருக்கிறேன்.

28-ந்தேதி காலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாயில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.

இதன்பின்பு, காஞ்சிக்கு வருகிறேன். உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம். கொள்கை தோழமைகளுடன் பவள விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News