தமிழ்நாடு (Tamil Nadu)

மெரினா சம்பவத்தை மறைக்க, ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடி வருகிறது- எல்.முருகன்

Published On 2024-10-13 07:02 GMT   |   Update On 2024-10-13 07:02 GMT
  • தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
  • ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது.

மதுரை:

மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பா.ஜ.க.வில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.

தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக ரெயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க தி.மு.க. ரெயில் விபத்தில் நாடகமாடி வருகிறார்கள்.

ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரெயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

ரெயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த ரெயில்வேயும் வேலை செய்யவில்லை என தி.மு.க. இந்தியா கூட்டணி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா நிகழ்ச்சியின் போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

மெட்ரோ ரெயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள். இதற்காக நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரெயில் விபத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். தி.மு.க.வின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சியாகவே இருந்திருக்கிறது.

பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். எந்தப்பக்கம் சென்றாலும் மனமகிழ் மன்றங்கள் தான் உள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர்.

விஜய் வருகிற 27-ந்தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு, கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி, ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News