மின் நிறுத்தம் விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை - அண்ணாமலை பேட்டி
- மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது.
- சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நிறைவுப்பெற்றது.
கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சென்னை, கிண்டியில் அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
அப்போது அவர், "மின் நிறுத்தம் தொடர்பாக அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது.
அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.
மேலும், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்றைய பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும்
அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் " என்றார்.