தமிழ்நாடு (Tamil Nadu)

மின்சார ரெயிலில் சாகச பயணம் செய்த கல்லூரி மாணவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Published On 2024-10-13 07:30 GMT   |   Update On 2024-10-13 07:30 GMT
  • அபிலேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

மாதவரம் பெருமாள் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் கொண்டையன். கொத்தனார். இவரது மகன் அபிலேஷ். சென்னை பூக் கடையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் 1-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்வதற்காக மின்சார ரெயிலில் நண்பர்களுடன் பயணம் செய்தார்.

அப்போது அபிலேஷ் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பயணம் செய்தார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

அபிலேஷ் சாகச பயணம் செய்தபோது திடீரென தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பத்தில் அவரது தலை மோதியது. இதில் அபிலேஷ் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த நிலையத்தில் ரெயில் நின்றதும் மாணவர்கள் இறங்கி சென்று பார்த்தனர். அங்கு தண்டவாளம் அருகே மாணவர் அபிலேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அபிலேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபிலேஷ் சாகச பயணம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பதபதைக்க வைக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர் ரீல்ஸ் எடுப்பதற்காக சாகச பயணம் செய்தாரா என்பது குறித்து ராயபுரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News