தமிழ்நாடு (Tamil Nadu)

முல்லைப்பெரியாறு அணையை மீண்டும் ஆய்வு செய்ய எதிர்ப்பு

Published On 2024-09-22 07:33 GMT   |   Update On 2024-09-22 07:33 GMT
  • கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
  • எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள போதிலும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அதிகாரிகள் செல்லும்போதெல்லாம் கேரள அரசு அதிகாரிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் அணை பலம் இழந்து விட்டதாக அடிக்கடி வதந்தி கிளப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து தமிழக பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வருகிற 1ந் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டுகள் அணையை கொண்டு வர உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற ஆய்வு அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளாவுக்கு சாதகமாகும் என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கமிஷன் பரிந்துரையை கண்டித்து இன்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இருமாநில எல்லையில் பதட்டம் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவு படி பேபி அணையை பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்துச் செல்லக்கூடாது. ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வருகிறது. ஆனால் போலி அறிக்கை வெளியிட்ட சர்வே ஆப் இந்தியாவை கண்டித்தும் போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News