தமிழ்நாடு

நாகையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.220 கோடி மோசடி- உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Published On 2023-03-01 04:48 GMT   |   Update On 2023-03-01 04:48 GMT
  • நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
  • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக ரவி (வயது 64).

இந்த நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வாட்ஸ்அப் செயலி மூலம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நாகை குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி அலுவலகத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கடந்த 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட்டு தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News