தமிழ்நாடு (Tamil Nadu)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

Published On 2024-10-06 05:43 GMT   |   Update On 2024-10-06 05:43 GMT
  • அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
  • விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டது.

மேலும் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை பெய்வதாலும், அறுவடை தொடங்கி உள்ளதாலும் தண்ணீரின் தேவை குறைந்துள்ளது.

இதனால் நேற்று 1333 கன அடியாக இருந்த நீர் திறப்பு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 260 கன அடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.35 அடியாக உள்ளது. 3291 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

தமிழக பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 117 மெகாவட்டாக குறைந்தது.

வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1181 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2828 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 7, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 15ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைப்பொழிவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News