தமிழ்நாடு

ஒகேனக்கல்

30-வது நாளாக குளிக்க தடை விதிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-08-08 03:41 GMT   |   Update On 2022-08-08 03:41 GMT
  • கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பென்னாகரம்:

கர்நாடகா மற்றும் கேரளா மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநில கபினி அணைக்கு 24 ஆயிரத்து 932 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 97 ஆயிரத்து 969 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

இந்த இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 969 கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 30-வது நாளாக தடை விதித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News