தமிழ்நாடு

ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: 23-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

Published On 2022-08-01 04:01 GMT   |   Update On 2022-08-01 04:01 GMT
  • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

பென்னாகரம்:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று ஒகேனக்கலுக்கு 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 23-வது நாளாக தடை விதித்துள்ளது.

போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News