தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-08-13 04:01 GMT   |   Update On 2024-08-13 04:01 GMT
  • மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது.
  • அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

சேலம்:

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதிக பட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பும் நிறுத்தப்பட்டது.

ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.41 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News