தமிழ்நாடு (Tamil Nadu)

காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட 20 பேர் உடல்கள் - 10 பேரிடம் விசாரணை

Published On 2024-07-12 05:06 GMT   |   Update On 2024-07-12 05:06 GMT
  • சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
  • முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.

இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.

இந்த காப்பகத்தில் ஆரம்பத்தில் 60 பேர் இருந்து வந்ததாகவும், அதன் பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த போது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாகவே உள்ளது.

இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பெயர், ஊர் விவரம், தற்போது இருப்பவர்கள் பெயர், ஊர் விவரம் உள்ளிட்ட எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை.

மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்கள் உடல் உடற்கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களுமே இல்லை. இறந்தவர்களை தங்கள் காப்பகத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தான் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இறந்தவர்கள் எந்த நிலையில் புதைக்கப்பட்டனர் என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மன நல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, அதில் பணிபுரிந்த ஊழியர்கள் என 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் 10 பேரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் காப்பகத்தில் இருந்த மன நோயாளிகளுக்கு மாதம் ஒருமுறை சிகிச்சை அளிக்க சென்ற செவிலியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News