தமிழ்நாடு

3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை- முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published On 2024-08-21 09:29 GMT   |   Update On 2024-08-21 10:54 GMT
  • 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

சென்னை:

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள்!

நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்து வதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது!

அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை-631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய்! இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.


தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களைப் போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்… தொழில் தொடங்க வையுங்கள்…

தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.

* தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,

* ஜவுளி மற்றும் ஆடைகள்,

* கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்ன வென்றால், இதில் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கானவை!

பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் நம்முடைய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

130-க்கும் மேற்பட்ட 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.

நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசு செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News