தமிழ்நாடு (Tamil Nadu)

தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

Published On 2023-09-17 05:54 GMT   |   Update On 2023-09-17 05:54 GMT
  • நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.
  • மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

தேவகோட்டை:

புதுச்சேரி மாநிலம் வம்பபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடி. இவரது மகன் ஹரிகரன் (வயது26). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பரணி (19). நண்பர்களான இவர்கள் மோட்டார் சைக்கிளில் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள உதயாட்சி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பரணியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News