நெல்லையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு துறைக்கு புதிய மண்டலம்: சபாநாயகர் திறந்து வைத்தார்
- நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
- மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி துறையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென்மண்டலத்தினை 2 ஆக பிரித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாளை என்.ஜி.ஓ.பி. காலனி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீயணைப்பு மீட்புப்பணி துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயக்குமார், நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டலமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 34 தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்களையும் உள்ளடக்கியது.
பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இம்மண்டல துணை இயக்குநர் உடனுக்குடன் விரைந்து சென்று பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலக்திற்கு சென்று வருவதற்கான பயண நேரம் குறையும். இந்த மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.