கொரோனா அதிகரிக்கும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசியில் ஆர்வம் குறைவு- அதிகாரிகள் கவலை
- பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளம் வயதினரிடயே ஆர்வம் குறைவாக உள்ளது.
- 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.
சென்னை:
கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான்.
2 தவணை தடுப்பூசி போட்டு இருந்தாலும் 2-வது தவணை போட்டு 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படியானால் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எனவேதான் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக போடபப்படுகிறது.
18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.
ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை. இதுவரை சுகாதார பணியாளர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 524 பேர் போட்டுள்ளார்கள். முன்கள பணியாளர்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 751 பேர் போட்டுள்ளார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8 லட்சத்து 47 ஆயிரத்து 558 பேர் போட்டுள்ளார்கள்.
18 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 48 ஆயி ரத்து 710 பேர் போட்டுள்ளார்கள். ஆஸ்பத்திரிகளுக்கு தினமும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டால்தான் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்ற நிலையில் மக்களிடையே ஆர்வம் இல்லாததது அதிகாரிகளை கவலை அடைய வைத்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதில் 85 சதவீதம் பேர் தடுப்பூசி ஒரு டோஸ் கூட போடாதவர்களாக உள்ளார்கள். 5 சதவீதம் பேர் முதல் தவணை மட்டும் போட்டுக் கொண்டவர்களாகவும் 8 சதவீதம் பேர் 2 தவணை ஊசி போட்டிருந்தும் இணை நோய் உள்ளவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இரண்டு தவணை ஊசி போட்டு 9 மாதம் கடந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை.
தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகுபவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசியே போடாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது ஒரு தவணை மட்டும் போட்டவர்களாகவே அல்லது இரண்டு தவணை போட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆனவர்களாக இருக்கிறார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளம் வயதினரிடயே ஆர்வம் குறைவாக உள்ளது. முதியோரை பொறுத்தவரை வெளியே சென்று ஊசி போட வருத்தப்பட்டு செல்வதில்லை என்று தெரிய வந்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டால் அபாய கட்டத்துக்கு செல்ல மாட்டார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.