தமிழ்நாடு (Tamil Nadu)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து- உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

Published On 2023-07-13 08:23 GMT   |   Update On 2023-07-13 08:23 GMT
  • கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் கடந்த 6-ந்தேதி இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, முகேஷ் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

Tags:    

Similar News