புதுச்சேரி
null

கழிவறையில் மயங்கி விழுந்து 3 பேர் பலியான ரெட்டியார்பாளையத்தில் மீண்டும் விஷவாயு கசிவா?- மக்கள் பீதி

Published On 2024-06-28 04:45 GMT   |   Update On 2024-06-28 04:45 GMT
  • வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை பொதுப்பணித் துறையினர் சுத்தம் செய்து புதிய 'மேன்ஹோல்'களை அமைத்தனர்.

இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர்.

கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:-

வீடுகளில் சமையல் கியாஸ் போன்ற வித்தியாசமான வாசனை வருவதாக தகவல் வந்தது. ஆய்வு செய்தபோது, மீத்தேன் வாயுவின் வாசனை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

அதனால், உயிருக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த வாயு குப்பைகள் மற்றும் சாக்கடைகள் மூலமும் வரக்கூடும். பொதுவாக ஹைட்ரஜன் சல்பேட், கார்பன் மோனக்சைடு வாயுவால் மட்டும் பாதிப்பு வரும். இப்போது குடியிருப்பு பகுதிகளில் அந்த வாயுக்கள் வெளிவரவில்லை.

இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News