தமிழ்நாடு (Tamil Nadu)

யூடியூபர் இர்பான் மீது காவல் நிலையத்தில் புகார்- மருத்துவமனைக்கு நோட்டீஸ்

Published On 2024-10-22 04:16 GMT   |   Update On 2024-10-22 04:16 GMT
  • அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் தொப்புள் கொடியை டாக்டர்கள் அல்லது பயிற்சி பெற்ற நர்சுகள்தான் வெட்ட வேண்டும்.
  • போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர்.

பிரபல யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி கூறுகையில்,

அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் தொப்புள் கொடியை டாக்டர்கள் அல்லது பயிற்சி பெற்ற நர்சுகள்தான் வெட்ட வேண்டும். யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது தவறு. வெட்டும்போது அவர் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. இதனால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும், யூடியூபர் இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். விளக்கம் சரியாக இல்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே, யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கி உள்ளார்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை மீதும், இர்பான் மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஏற்கனவே மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்? யார்? எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களை கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News