தமிழ்நாடு

வாழப்பாடியில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2023-04-30 08:17 GMT   |   Update On 2023-04-30 08:18 GMT
  • அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
  • விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 63). வாழப்பாடி உள்பட பல்வேறு பகுதியில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவரது மனைவி விஜயலட்சுமியை திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்றபோது இவரது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடிச்சென்றார். அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

சின்னுசாமி தனது வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1 லட்சம் ஆகியவற்றை அந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றதும், பட்டுப்புடவை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பேக்கிங் செய்து கொள்ளையடித்து செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை, அவர் விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News