தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Published On 2024-09-12 03:01 GMT   |   Update On 2024-09-12 04:22 GMT
  • ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
  • தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஜனவரி மாதம் 14-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையும் 15-ந்தேதி (புதன் கிழமை) மாட்டு பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13-ந்தேதி (திங்கட்கிழமை) வருகிறது.

அரசு விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே பயணத்தை திட்டமிடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ள சனி, ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் ஜனவரி 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் பயணம் தொடங்குகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போகி பண்டிகை அன்று ஒரு நாள் விடுமுறை போட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ரெயில் உறுதியான டிக்கெட் கிடைப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதால் 120 நாட்களுக்கு முன்பாக பயணத்தை திட்டமிட்டு இன்று முன்பதிவு செய்ய தொடங்கினர்.

ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. டிக்கெட் எடுப்பதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணாநகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்து நின்றனர்.

ஒரு சிலர் அதிகாலை 5 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பின.

நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், தென்காசி, பொதிகை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் நிரம்பின.

டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்ற ஒரு சிலருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. மற்றவர்கள் காத்திரிப்போர் பட்டியலுடன் டிக்கெட்டை பெற்று சென்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்தனர். இதனால் கவுண்டர்களில் காத்து நின்றவர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

ஏ.சி., 2-ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டும் இடங்கள் காலியாக இருந்தன. ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் மட்டுமின்றி பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதால் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

மேலும் ஜனவரி 11-ந்தேதி செல்ல விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமையும், ஜனவரி 12-ந்தேதி பயணத்திற்கு வருகிற 14-ந்தேதியும் முன்பதிவு செய்ய தயாராக உள்ளனர்.

பொங்கல் பயணத்திற்கான வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பி விட்டன. சென்னை-நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அனைத்து வந்தே பாரதம் ரெயில்களிலும் இடங்கள் இல்லை.

Tags:    

Similar News