மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தே.மு.தி.க. அலுவலகத்தை தங்கவும், சாப்பிடவும் பயன்படுத்தி கொள்ளலாம்- பிரேமலதா
- மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
- மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக்காலத்தில் மக்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செய லாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அரசு 4 ஆண்டு காலமும் மழை வெள்ளம் ஏற்படும்போது 96 சதவீதம் வேலைகள் நிறைவு பெற்று விட்டதாக சொல்லும். ஆனால் அரசு இன்றைக்கு வரைக்கும் எந்தவித வேலைகளையும் முடித்ததாக தெரியவில்லை. மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை 100 சதவீதம் முடியவில்லை.
எனவே சாலையில் செல்பவர்கள் இரண்டு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே 3 உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இறந்ததாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு பாதிப்பு, மின்கம்பங்கள் சாய்வதும், உயர் மின்அழுத்த கம்பிகள் அறுந்து விழுவதையும் உடனடியாக கண்காணித்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக்காலத்தில் மக்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மழைநீரால் பாதிக்கப்பட்டவர்கள் தே.மு.தி.க. அலுவலகத்தை நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும்.
தே.மு.தி.க.வைச் சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.