தமிழ்நாடு

சசிகலா இன்று மாலை ஈரோடு வருகை- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு

Published On 2022-09-13 10:10 GMT   |   Update On 2022-09-13 10:10 GMT
  • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
  • சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு:

சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக சசிகலா வருகை தந்து நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து இரவில் சசிகலா சேலத்தில் ஓய்வு எடுத்தார். இன்று 2-வது நாளாக மதியம் 3 மணி அளவில் அரியானூரில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் வழியாக மாலை 6 மணி அளவில் சசிகலா ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சசிகலா பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் இருந்து பொதுமக்கள் மத்தியில் சசிகலா பேசுகிறார். பின்னர் திண்டலுக்கு செல்லும் சசிகலா அங்கு புகழ் பெற்ற திண்டல் வேலாயுதசாமி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

சாமி தரிசனம் முடித்துக்கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவை செல்கிறார். சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளராக உள்ளனர். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேச வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

எனினும் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்தித்து பேசாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

Tags:    

Similar News