தமிழ்நாடு

திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன்- சீமான்

Published On 2024-09-14 08:42 GMT   |   Update On 2024-09-14 08:42 GMT
  • காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம்.
  • டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா?

திருமங்கலம்:

மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா. தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.

காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.

தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை உள்ளது. ஆனால் வேலுநாச்சியாருக்கு சிலை இல்லை. நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நம்மிடத்தில் தமிழ் இல்லை.

டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா? என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா?

மலை, மணல் திருடினால் பரவாயில்லை-எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைதான் இங்கு உள்ளது. சீமான் வந்த பிறகு அனைத்தையும் தமிழில் தான் பேசுவார்கள். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? இந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான்.

அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.

திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News