தேசிய கொடிகளை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.
- கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றியும் நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.
சட்டமன்றம் ஆரம்பித்த 1921 முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.
தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது கேள்வி பதில் நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இனி சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
1962 இந்தியா-சீன போரின்போது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மகாபலிபுரத்தில் சீனா அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் வரை 57 ஆண்டுகள் சீன எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு தற்போது இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்த கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து தேசிய கொடிகளை இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது.
மேலும் மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு, நம்முடைய தேசிய கொடி மேட் இன் சைனாவாக இருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது குறித்து அனைத்து சபாநாயகர்களும், பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு அவர் புன்முறுவலோடு சென்றுவிட்டார். மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு தேசியக்கொடியை மேட் இன் சைனாவுடன் நமது தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு செல்லும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருந்தது.
மேலும் இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால் சீன உளவு கப்பல் வந்தது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.