வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது- அமைச்சர் பெரியகருப்பன்
- முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆட்சிக்கு வந்து தனது திறமையான நிர்வாகத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்களில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து உணவுத்துறை அமைச்சரும், வேளாண்மை துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல தகவல் வரும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை அனைத்து மகளிருக்கும் வழங்குவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.