தமிழ்நாடு

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பகுதிகளில் ஒரே நாளில் நடைபெற்ற 100 திருமணங்கள்

Published On 2024-05-19 05:10 GMT   |   Update On 2024-05-19 05:10 GMT
  • சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது.
  • திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

இந்த நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 70 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 30 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் தேவநாத சாமி கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் தேவநாத சாமியை கும்பிட்டு சென்றனர். மேலும் புதுமண தம்பதிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.

மேலும் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.

Tags:    

Similar News