திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
- போலீசார் மாணவர்களின் சட்டை பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராகுல் (வயது 19), மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் மகன் சபிக் (19). இருவரும் நண்பர்கள். ராகுல், சபிக் ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி சாலை வழியாக வந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு பகுதியில் வந்தபோது வடசென்னையிலிருந்து பெண்ணாடத்திற்கு சிமெண்ட் லோடு ஏற்றிய 2 கண்டெய்னர் லாரிகள் வந்தது. 2 லாரிகளும் வலது, இடது புறமாக வந்துகொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல்,சபிக் ஆகியோர் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திசெல்ல முற்பட்டனர். இதில் லாரியின் நீளம் அதிகமாக இருந்ததால் எதிர்பாரதா விதமாக லாரி வாலிபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல், சபிக் மீது லாரி ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் ராகுல், சபிக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவர்களின் சட்டை பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்கள் திருச்சியிலிருந்து எங்கு சென்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை.