தமிழ்நாடு (Tamil Nadu)
கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசிய காட்சி. அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி?

Published On 2023-01-13 07:42 GMT   |   Update On 2023-01-13 07:42 GMT
  • அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
  • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.

அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.

இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News