தமிழ்நாடு

தூத்துக்குடியில் 8 நாட்களுக்குப் பின்னர் விசைப்படகு தொழிலாளர்கள் மீன் பிடிக்க சென்றனர்

Published On 2023-02-13 05:43 GMT   |   Update On 2023-02-13 05:43 GMT
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
  • விசைப்படகுகளில் வழக்கம் போல மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த 5-ந் தேதி முதல் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் தொழிலாளர்களுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுக நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு நிலையது.இதனால் தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருந்து வந்தனர்.

மீனவர்களின் இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட விசை படகு மீன்பிடி தொழிலாளர்கள் தங்கத்தைச் சேர்ந்த தர்மபிச்சை உள்ளிட்ட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 8 நாட்களுக்கு பின்னர் இன்று காலை மீன்பிடி தொழிலாளர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம் போல மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News