பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.44 ஆக உயர்வு
- பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
- அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,435 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 3-ந்தேதி ஆடி 18 கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் பவானிசாகர் அணையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வரக்கூடும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெள்ள கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஆடி 18 அன்று பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அணையின் மேல் பகுதி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பவானிசாகர் பூங்கா எப்பொழுதும் போல் முழுமையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு செல்ல தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.