தமிழ்நாடு

சென்னையில் பரபரப்பான சாலைகள்-நெரிசலான பகுதிகளில் மாடு வளர்க்க தடை: மாநகராட்சி அதிரடி முடிவு

Published On 2023-10-31 06:41 GMT   |   Update On 2023-10-31 06:41 GMT
  • மாநகராட்சி உயர் போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
  • மாட்டின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.

சென்னை:

சென்னை மாநகரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் ரோட்டில் நடந்து செல்பவர்களை முட்டி தூக்கி வீசும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் 10 நாட்களுக்கு பிறகு நேற்று பலியானார். இந்த உயிரிழப்பை தொடர்ந்து சென்னை மாநகர பகுதிகளில் மாடுகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையோரமாக கட்டி வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் இது போன்று மாடுகளை ரோட்டில் கட்டி வைத்து பால் கரப்பது, அவைகளை குளிப்பாட்டுவது என மாட்டு தொழுவம் போல சாலையை பயன்படுத்துவது தெரிய வந்து உள்ளது.

இது போன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பரபரப்பான சாலைகள், நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகளை வளர்ப்பதற்கு தடை விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. கடந்த 2 மாதங்களில் மாடுகளை சாலையில் திரிய விட்ட அவர்களிடமிருந்து ரூ. 78 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட மாடுகளை யாரும் உரிமம் கொண்டாடாத நிலையில் அவைகளை கோசாலைகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடுகளை வளர்ப்பவர்களில் சிலர் அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும், ரெய்டு நடத்தச் செல்லும் போது முன்கூட்டியே மாட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் மாநகராட்சி உயர் போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடந்த 3 நாட்களில் 34 மாடுகளை பிடித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டில் திரியும் மாடுகளுக்கு எதிராகவும், மாட்டின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News