பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் செல்போன், கேமராவை பாதுகாக்க கட்டணம் வசூல்: அக்.1-ந் தேதி முதல் அமல்
- பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
- சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மேலும் அனுமதியின்றி கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். தரிசனம் முடிந்த பிறகு அதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பழனி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் திடீரென முன்னறிவிப்பின்றி விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் செல்போனுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.