தமிழ்நாடு

தீபாவளி நெருங்குவதையொட்டி பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

Published On 2023-11-02 07:40 GMT   |   Update On 2023-11-02 07:40 GMT
  • ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
  • கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தென்காசி:

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளை விரும்பி உண்பர்.

இதனால் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள சந்தை வழக்கம் போல் இன்று கூடியது. இதில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இருப்பினும் ரூபாய் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது. ஆட்டுச்சந்தையின் அருகே மாட்டு சந்தையும் இயங்கி வரும் நிலையில் கனமழையின் காரணமாக மழைநீர் மாட்டு சந்தை முழுவதும் தேங்கியதால் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News