5-வது முறையாக பிளக்ஸ் பேனர் மாற்றம்- அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி படம்
- பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர்.
- அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மேற்கொள்ள பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர். அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.
இந்த 4 பேனர்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணி கட்சி என்ற முறையில் த.மா.கா. ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மீண்டும் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் பேனர் மாற்றி வைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என மாற்றி பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் படமும், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர் படமும் இடம் பெற்றுள்ளது.