இலங்கை தமிழர்களுக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி.
- தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
- மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்கள் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தவித்து வருகின்றனர். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் சாதாரண நடுத்தர மக்கள் ஏழை மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவித்து வருகின்றனர். இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறுநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும் பெட்ரோல், கோதுமையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும் இலங்கைக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்று தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.89 ஆயிரத்து 136-யை இலங்கை மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசுக்கு மாவட்ட போலீஸ் துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இவரது இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போலீசார், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.