தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானல் வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-05-14 04:06 GMT   |   Update On 2023-05-14 04:06 GMT
  • ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

கொடைக்கானல்:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் வருகிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு கார்மூலம் செல்கிறார். வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு மாலை 4.30 மணிக்கு வருகிறார். எனவே மதியம் 2 மணிமுதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இதேபோல் 16-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை இந்த சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஆளுநர் வருகையையொட்டி தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன்(திண்டுக்கல்), பிரவீன்உமேஷ்டோங்கரே(தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News